
Business
oi-Prasanna Venkatesh
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் மிகப் பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 6 முதல் 10 வரை நடைபெற்ற வர்த்தகத்தில் சுமார் 5.5 முதல் 6 சதவீதம் வரை லாபம் ஏற்பட்டது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்த வாராந்திர உயர்வாகும்.
இந்த லாபம் அடுத்த வாரமும் தொடரும் என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். காரணம், பாகிஸ்தானில் நடைபெறும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் சந்தையின் மனநிலையை மேம்படுத்தியுள்ளன.

ஆனா ஒரு டிவிஸ்ட்
அடுத்த வாரம் பங்குச்சந்தையில் முழு வர்த்தகம் நடைபெறாது. ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை டாக்டர் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை காரணமாக வர்த்தகம் முழுமையாக நிறுத்தப்படும். எனவே அடுத்த வாரம் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். முதலீட்டாளர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு முதலீட்டை திட்டமிட வேண்டும்.
ஏப்ரல் 14 அன்று எந்தெந்த பிரிவுகள் மூடப்படும்?
ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையின் பல முக்கிய பிரிவுகள் முழுமையாக மூடப்படும். ஈக்விட்டி (பங்கு) பிரிவு மற்றும் ஈக்விட்டி டெரிவேடிவ் (பங்கு டெரவேட்டிவ்) பிரிவுகளில் வர்த்தகம் முழுவதும் நிறுத்தப்படும். கரன்சி டெரிவேடிவ் (நாணய டெரவேட்டிவ்), என்டிஎஸ்-ஆர்எஸ்டி மற்றும் டிரை பார்ட்டி ரெப்போ பிரிவுகளும் மூடப்படும்.
எனினும், கமாடிட்டி டெரிவேடிவ் பிரிவு மற்றும் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட் (ஈஜிஆர்) பிரிவுகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் வர்த்தகம் நிறுத்தப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் வர்த்தகம் தொடங்கும். இந்த விவரங்கள் இந்திய பங்குச்சந்தை விடுமுறை பட்டியல் 2026-ஐ அடிப்படையாகக் கொண்டவை.
கடந்த வாரம் பங்குச்சந்தை
கடந்த வாரம் பங்குச்சந்தை மிகவும் ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. முதல் இரண்டு நாட்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (எஃப்ஐஐ) வெளியேற்றம் ஆகியவை சந்தையை பலவீனப்படுத்தின. ஆனால் வாரத்தின் நடுப்பகுதியில் நிலைமை திடீரென மாறியது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, கச்சா எண்ணெய் விலை குறைந்தது, ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலையானதாக இருந்தது ஆகிய காரணங்களால் சந்தை பெரும் ஏற்றத்தைப் பெற்றது.
பைனான்ஷியல், ரியால்ட்டி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் முன்னணியில் இருந்து பெரும் லாபத்தை அளித்தன. இந்த ஏற்றம் முழு சந்தையையும் உயர்த்தியது.
அடுத்த விடுமுறை எப்போது?
இந்த அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறைக்குப் பிறகு அடுத்த பங்குச்சந்தை விடுமுறை மே 1, 2026 அன்று உழைப்பாளர்கள் தினம் மற்றும் மகாராஷ்டிரா தினம் கொண்டாட்டத்துக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் இந்திய பங்குச்சந்தைக்கு இன்னும் சிறப்பான வர்த்தக காலம் வரும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/indian-stock-market-holiday-alert-only-4-trading-days-next-week-ambedkar-jayanti-closure-on-april-789133.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


