ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது | What are the implications for India as Iran struggles to clear mines in the Strait of Hormuz?

International

oi-Velmurugan P

தெஹ்ரான்: உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் நீரிணையில், ஈரான் ராணுவம் விரித்துள்ள கண்ணிவெடி வலையில் அந்த நாடே சிக்கி திணறி வருகிறது. ஏனெனில் மீட்கும் தொழில்நுட்பம் ஈரானிடம் இல்லாததால் சிக்கல் நீடிக்கிறது. பொதுவாக பாதுகாப்பிற்காக கண்ணிவெடிகளை ஈரான் வைக்கும் போது, ராணுவ வரைபடத்தின்படி வைக்க வேண்டும்.. ஆனால் ஈரான் அப்படி கண்ணிவெடிகளை வைக்காமல் அவசர அவசரமாக தவறாக வைத்துவிட்டது. இதனால் கடலில் ஊசியை தேடுவது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் நீரிணையில், ஈரான் ராணுவம் ‘கண்ணிவெடி வலை’ இப்போது அந்த நாட்டுக்கே பெரும் சவாலாக மாறியிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், நீரிணையை முழுமையாகத் திறக்க முடியாமல் ஈரான் திணறுவதற்கு இதுவே முக்கியக் காரணம் ஆகும்.

Iran struggles

சிறிய ரக படகில் கண்ணிவெடி

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, கடந்த மார்ச் மாதம் போர் உச்சத்தில் இருந்தபோது, ஈரான் தனது சிறிய ரகப் படகுகள் மூலம் ஹார்முஸ் நீரிணை முழுவதும் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை வைத்திருக்கிறது. ஆனால் திட்டமிடப்பட்ட ராணுவ வரைபடத்தின்படி நடக்காமல், அவசர அவசரமாகச் செய்யப்பட்டதால், எந்தெந்த இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான துல்லியமான தரவுகள் ஈரானிடம் இல்லாமல் போய்விட்டது.

பலத்த நீரோட்டம்

இது ஒருபுறம் எனில், பாரசீக வளைகுடாவின் பலத்த நீரோட்டம் காரணமாக, வைக்கப்பட்ட இடத்திலிருந்து பல மைல் தூரம் இந்தக் கண்ணிவெடிகள் நகர்ந்து சென்றுவிட்டன. பொதுவாக கண்ணிவெடிகளை வைப்பது எளிது. ஆனால் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அகற்றுவது மிகவும் கடினமான பணி. தற்போது அவற்றை அகற்றத் தேவையான நவீனத் தொழில்நுட்பம் ஈரானிடம் போதிய அளவு கிடையாது.

ஈரான் எச்சரிக்கை

இந்தச் சிக்கலைத் தொடர்ந்து, ஈரான் ராணுவம் சர்வதேசக் கப்பல்களுக்குப் புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. முக்கியமான வழித்தடங்களில் கண்ணிவெடிகள் மோதும் அபாயம் இருக்கிறது, எனவே லாரக் தீவு வழியாகச் செல்லும் ஒரு குறுகிய “வடக்கு வழித்தடத்தை” ஈரான் அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் கப்பல்கள் ஈரானிய ராணுவத்தின் வழிகாட்டுதலைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இதற்காகத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1000 கப்பல்களுக்கு சிக்கல்

ஹார்முஸ் நீரிணை வழியாகவே உலகின் 20 முதல் 30 சதவீதம் வரை கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த கண்ணிவெடி சிக்கல் காரணமாக தேங்கி கடலில் காத்திருக்கின்றன. இதனால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்திலேயே நீடிக்க ஈரானின் இந்த கண்ணிவெடி வியூகம் அமைந்துள்ளது.

சவால்கள் உள்ளன

இதனிடையே ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராட்சி கூறுகையில், “தொழில்நுட்பக் காரணங்களால் நீரிணையைத் திறப்பதில் சில சவால்கள் உள்ளன” என சூசகமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாளிதழின் இந்தத் தகவல், ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கியிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

கண்ணிவெடியால் என்ன நடக்கும்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் பயன்படுத்தியுள்ளதாகக் கருதப்படும் கண்ணிவெடிகள், வெறும் வெடிபொருட்கள் மட்டுமல்ல; அவை உலகப் பொருளாதாரத்தை முடக்கும் ‘மறைமுக ஆயுதங்கள்’ ஆகும். ஏனெனில் இவை கடலடியில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, நீரின் மேற்பகுதிக்குச் சற்று கீழே மறைந்திருக்கும். கப்பலின் மேலோடு இவற்றின் மீது மோதும்போது பயங்கர வெடிப்பு நிகழும். சில கண்ணிவெடிகள் கப்பல் தொட்டவுடன் வெடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பெரிய கப்பல் கடந்து செல்லும்போது ஏற்படும் நீரின் அழுத்தம், எந்திரங்களின் சத்தம் அல்லது கப்பலின் காந்தப் புலத்தை உணர்ந்து தானாகவே வெடிக்கும் ‘சென்சார்’ வசதியுடன் இருக்கிறது.

ஊசியை தேடுவது போன்றது

வழக்கமான கண்ணிவெடிகளைப் போலன்றி, கடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக இவை பதித்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்துவிடும். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியை ‘சுத்தம்’ செய்வது என்பது கடலில் ஊசியைத் தேடுவதற்குச் சமம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க நவீன சோனார் கருவிகள் மற்றும் நீர்க்கடியில் இயங்கும் ரோபோக்கள் வேண்டும்.

பல ஆண்டுகள் ஆகும்

அவற்றின் மூலம் ஓரளவுக்குக் கண்டறிய முடியும். ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் கண்ணிவெடியால் தாக்கப்பட்டு உடைந்தால், லட்சக்கணக்கான டன் கச்சா எண்ணெய் கடலில் கலக்கும். இது அந்தப் பிராந்தியத்தில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை முற்றிலுமாக அழித்துவிடும். இந்த எண்ணெயை அகற்றி கடலைச் சுத்தப்படுத்த பல ஆண்டுகள் ஆகும். இது ஈரானுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இது ஈரானுக்கு பேரழிவாக அமைந்துவிடும். அத்துடன் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் எண்ணெய் கிடைக்காமல் அவதிப்படும் நிலை தொடரும் அபாயமும் உள்ளது

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/what-are-the-implications-for-india-as-iran-struggles-to-clear-mines-in-the-strait-of-hormuz-789379.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo