
International
oi-Mani Singh S
மாஸ்கோ: மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருப்பதாக, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனிடம் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெசஸ்கியானுடன் பேசியுள்ளார்.
அமெரிக்கா- ஈரான் இடையே நேற்று இரவு முதல் விடிய விடிய பாகிஸ்தானில் சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்போம் என்று மிரட்டியுள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து இருப்பதால், ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த சில மணி நேரங்களில் ஈரான் அதிபர் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின், மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள தயார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோதலுக்கு அரசியல் மற்றும் தூதரக வழிகளில் தீர்வு காணும் முயற்சிகளை மேலும் முன்னெடுக்கவும், மத்திய கிழக்கில் நியாயமான மற்றும் நீடித்த அமைதியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் மத்தியஸ்தம் செய்யவும் தனது தயார் நிலையை விளாடிமிர் புதின் வெளிப்படுத்தினார் என்று அந்த தொலைபேசி உரையாடல் குறித்த அறிக்கையில் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை. இந்த சூழலில்தான், மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழலுக்கு இடையேதான் புதின், மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, ஈரானுக்கு சீனாவும், ரஷ்யாவும் மறைமுக உதவிகள் செய்வதாக அமெரிக்கா சந்தேகம் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு போரில், ஈரானுக்கு ஆயுத உதவிகளை செய்தால் சீனாவுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் இன்று கூறுகையில், ‘ஈரானுக்கு ஆயுத உதவிகளை செய்து சீனா பிடிபட்டால், அவர்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி போடப்படும். இது மலைக்க வைக்கும் தொகையாக இருக்கும்” என்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த வாரம் பீஜிங் செல்ல உள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/putin-offers-to-mediate-peace-after-us-iran-talks-fail-speaks-with-iran-president-789433.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
