
Business
oi-Prasanna Venkatesh
மும்பை: திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கின. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சுமார் இரண்டு சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. கிஃப்ட் நிஃப்டி 1 சதவீதம் மட்டுமே குறைந்திருந்த நிலையில் சென்செக்ஸ், நிஃப்டி 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக சரிவுக்கு அமெரிக்கா – ஈரான் மத்தியில் உருவாகியுள்ள பதற்றம் மிகவும் மையமானது என்றாலும், பங்குச்சந்தை சரிவு மோசமான நிலைக்கு செல்ல பல்வேறு காரணங்கள் உள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
ஆசிய பங்குச்சந்தைக்கு இணையாக இந்திய பங்கு சந்தைகளும் வாரத்தின் தொடக்க நாளிலேயே கடுமையான சரிவுடன் திறந்தன. சென்செக்ஸ் சுமார் 1,700 புள்ளிகள் சரிந்து 75,868 அளவுக்கு வந்தது, நிப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் விழுந்து 23,555 கீழ் சரிந்தது. சந்தை அதிர்வை அளவிடும் இந்தியா VIX 13% க்கும் மேல் உயர்ந்து 21 அளவைத் தாண்டியது. இந்த வீழ்ச்சி தனிப்பட்ட சில பங்குகளில் மட்டும் அல்லாமல், மொத்த சந்தையையும் பாதித்தது.
அமெரிக்கா – ஈரான் மத்தியில் போர் நிறுத்தம் ஏற்படாமல் 2 வார போர் நிறுத்தம் முடிந்த பின்பு மீண்டும் தாக்குதல் துவங்கினால் பங்குச்சந்தை கூடுதலாக பாதிப்பு அடையவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
முக்கிய பங்குகள் மற்றும் முக்கிய துறைகள்
காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டில் இருக்கும் 30 நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், மாருதி சுசூகி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இண்டிகோ, ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், மஹிந்திரா ஆகியவை 1-4 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்தது. 30 நிறுவனங்களின் பட்டியலில் NTPC மட்டுமே லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
PSU வங்கி, ரியல் எஸ்டேட், ஆட்டோ மற்றும் கன்ச்யூமர் டியூரபிள்ஸ் துறைகள் 2-3% வரை சரிந்ததால், மொத்த சந்தையிலும் பாதிப்பு அதிகரித்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 2% க்கும் மேல் வீழ்ச்சி கண்டன. இன்றைய சரிவுக்கு முக்கியமான காரணங்கள்.
அமெரிக்கா – ஈரான் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹார்முஸ் நீரிணையில் கடற்படை கொண்டு மொத்தமாக ஈரான் கப்பல்களையும், ஈரான் சப்ளைகளையும் மொத்தமாக நிறுத்தும் நடவடிக்கை அறிவித்தது முதலீட்டு சந்தையை மொத்தமாக பாதித்தது. இதற்கு பதிலாக ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. இதனால் அடுத்தக்கட்ட போர் அச்சம் எதிரொலிக்க துவங்கியுள்ளது.
எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை கடந்தது
இந்த பதற்றத்தின் நேரடி விளைவாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 104 மற்றும் WTI கச்சா எண்ணெய் விலை 106 டாலர் அருகே வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த எண்ணெய் விலை உயர்வு இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்கு பெரிய சுமையாக பார்க்கப்படுவதால், பங்குச்சந்தையிலும் இது எதிரொலிக்கிறது.
ரூபாய் மதிப்பு சரிவு
இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் முழுவதும் வீழ்ச்சி காணப்பட்டன. ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் சந்தைகள் 1% க்கும் மேல் சரிந்தன. இதன் தாக்கமாக இந்திய ரூபாயும் பலவீனமடைந்து, டாலருக்கு எதிரான ரூபாய மதிப்பு 93.31 வரை சரிந்தது. அதே நேரத்தில் அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவுகள் உயர்ந்ததால், உலகளாவிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேற வாய்ப்பு அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர் வெளியேற்றம்
கடந்த வார இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 6% க்கும் மேல் உயர்ந்திருந்த நிலையில், இப்போது லாபப் பதிவு காரணமாகவும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) தொடர்ந்து பெரிய அளவில் விற்பனை செய்திருப்பது முதலீட்டாளர் நம்பிக்கையை பாதித்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்கா – ஈரான் மோதல், எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் உருவாகியுள்ள மந்தநிலை ஆகியவை சந்தையை மிகவும் பாதிக்கக்கூடிய கட்டத்தில் வைத்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் அவசர முடிவுகளை தவிர்த்து “காத்திருந்து கவனிக்கும்” அணுகுமுறையைப் பின்பற்றுவது சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், பொருளாதார வளர்ச்சியில் அதிகம் பங்குக்கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் எப்படி முதலீட்டையும், இழப்பையும் சரி செய்யலாம் என மறுபரிசீலனை செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/sensex-crashes-1600-points-as-oil-prices-surge-above-105-on-us-iran-tensions-hormuz-blockade-789521.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.



