
Business
oi-Prasanna Venkatesh
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உடனடி தலையீட்டை தீர்வு காண கோரிக்கை வைத்து கடிதம் எழுதி வருகின்றன.
இந்த தாமதம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே அதிருப்தியையும், கவலையையும் அதிகரித்துள்ளது எனவும் தொழிற்சங்கங்கள் கவலை நிதியமைச்சருக்கு சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் மூன்று மாதங்களுக்கான அரியர் தொகை ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கமான கால அட்டவணையில் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வருமானத்தில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய NPS ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய இரு முக்கிய அமைப்புகள் தனித்தனியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்தக் கடிதங்களில் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் DA/DR உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. NPS ஊழியர்கள் அமைப்பின் தலைவர் மஞ்சீத் சிங் படேல் ஏப்ரல் 9 அன்று அனுப்பிய கடிதத்தில், DA மற்றும் DR அறிவிப்பில் ஏற்படும் தாமதம் ஊழியர்களிடையே “ஏமாற்றமும், விரக்தியும்” ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிப்பு தாமதமாகும் போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இந்த DA மற்றும் DR உயர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் நிதியமைச்சர் உடனடியாக தலையிட்டு, DA/DR உத்தரவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 58% அளவில் உள்ளது. இந்த நிலையில் பணவீக்க அடிப்படையில் மத்திய அரசு இதை மேலும் 2% உயர்த்தி 60% ஆக மாற்றும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. வழக்கமாக, அகவிலைப்படி உயர்வு தொடர்பான முடிவுகளை மத்திய அரசு முக்கியமான தரவுகளின் அடிப்படையில் எடுக்கிறது.
குறிப்பாக தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீடு எனப்படும் ‘CPI-IW’ அடிப்படையில் கணக்கிடப்படும். இது கடந்த 12 மாதங்களின் சராசரி பணவீக்க அளவீடாகும்.
கடந்த ஒரு தசாப்த வளர்ச்சியை பார்க்கும்போது, 2016ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தின் தாக்கத்தை அரசு ஊழியர்களுக்கு களையும் வகையில் அகவிலைப்படி அளவு படிப்படியாக அதிகரித்து, தற்போது 60% என்ற முக்கியமான நிலையை எட்டியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/da-hike-delay-2026-central-government-employees-pensioners-urge-nirmala-sitharaman-for-immediate-788839.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
