
Business
oi-Prasanna Venkatesh
தங்கம் தான் முதலீட்டு சந்தையின் பிராதான தேர்வாக இருந்த காலம் மாறி தற்போது தங்கம், வெள்ளியை பார்த்தாலே முதலீட்டாளர்கள் பயந்து ஓடும் நிலை உருவாகியுள்ளது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உடைத்து தனது உச்ச விலையில் இருந்து மிகவும் குறுகிய காலக்கட்டத்திலேயே தரையை தட்டியுள்ளது. ஆனாலும் இந்திய மக்களுக்கு தங்கம், வெள்ளி வாங்குவதில் ஆர்வம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது அனைத்தும், முதலீடு செய்ய சரியான என்ட்ரி பாயின்ட் தான்.
அமெரிக்கா – ஈரான் மோதல் ஐந்தாவது வாரத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், தங்கம் விலை மற்ற போர் காலத்தை போல் அதிரடியாக உயராமல் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பது முதலீட்டாளர்களை சோகமடைய செய்கிறது.

தங்கம் விலை சரிவு
சர்வதேச சந்தையில் இந்த வார வர்த்தக முடிவில் COMEX தங்க விலை ஒரு அவுன்ஸ்-க்கு 4,679.70 டாலராக முடிவடைந்துள்ளது. இந்தியாவில் MCX சந்தையில் 10 கிராம் தங்க விலை 1,49,650 ரூபாய் என்ற நிலையில் உள்ளது. இது வரலாற்று உச்சமான ரூ.1,80,779-ஐ விட சுமார் ரூ.31,000 குறைவு, கிட்டத்தட்ட 17% குறைவான அளவாக உள்ளது.
இதுவே வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.4,39,337 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த நிலையில், தற்போது சுமார் ரூ.2,06,737 வரை குறைந்து, மொத்தத்தில் 47% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
போர் பதற்ற தொடர்பு
பொதுவாக, போர் அல்லது அரசியல் பதற்றம் அதிகரிக்கும் போது தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டு விலை உயர்வை காணும். ஆனால் தற்போதைய சூழலில் இந்த பாரம்பரிய நடைமுறை முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.
இதற்கு அடிப்படை காரணம் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை குறைந்து விலை உயர்வது தான். சப்ளை சீராக இருந்து விலை உயர்ந்தால் கூட தங்கம், வெள்ளி விலை சிறிய அளவில் உயர்ந்திருக்கும். தற்போது சப்ளை குறைந்துள்ள காரணத்தால் பணவீக்கம் வேகமாக உயர்ந்து ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் பெரிய அளவில் பாதித்து வருகிறது. இது அனைத்தும் டாலர் மதிப்பு உயர்வுக்கு சாதகமாக மாறிய காரணத்தால் தங்கம், வெள்ளி தனது பொழிவை இழந்துள்ளது.
டிரம்ப்
இந்த வாரம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு உரையாற்றிய பின்னர், ceasefire பற்றிய எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் குறைந்தன. இதனால் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது. இதே சமயம், அமெரிக்க டாலர் வலுப்பெற்றது. இந்த இரண்டு காரணிகளும் தங்கத்தின் அதிகமான உயர்வை கட்டுப்படுத்தியுள்ளன.
இதுமட்டுமா அமெரிக்கா – ஈரான் மத்தியிலான தாக்குதல் அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று இரவு ஈரான் அமெரிக்க பைடர் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பைலட் பத்திரமாக மீட்கப்பட்டார், இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
டாலர் வலிமை
போர் காலத்தில் தங்க விலை அதிகமாக உயராததற்கான முக்கிய காரணம், அமெரிக்க டாலரின் வலிமையாகும். உலகளவில் முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தை விட டாலரையே பாதுகாப்பான சொத்தாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது, இதனால் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணமாக உள்ளது.
மேலும், அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்பார்த்ததை விட நல்ல நிலையில் இருந்ததால், பொருளாதாரம் வலுவாக இருப்பது உறுதியானது. இதனால் பெட்ரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை கடுமையாக (hawkish stance) வைத்திருக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது டாலருக்கு ஆதரவாக இருந்து, தங்கத்தின் உயர்வை கட்டுப்படுத்துகிறது.
எண்ணெய் விலை உயர்வு
தங்கம் விலை சரிவதற்கு ஏற்றார் போல் கச்சா எண்ணெய் விலை 10% க்கும் மேல் உயர்ந்துள்ளது. இது உலகளாவிய பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. பணவீக்கம் அதிகரித்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி பணபுழக்கத்தை அதிகரிக்கும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட புழக்கம் அதிகம் உள்ள டாலருக்கு மாறியுள்ளனர்.
தங்கம் என்டரி பாயின்ட்
பிப்ரவரி 28 அன்று ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து, தங்க விலை சுமார் 7% வரை சரிவை சந்தித்துள்ளது. இது, தற்போதைய சந்தை மந்த நிலையை காட்டுகிறது. இதேவேளையில் போர் பதற்றம் குறையும் வண்ணம் பேச்சுவார்த்தை கூட அமெரிக்கா – ஈரான் உட்காரவில்லை, இத்தகைய சூழ்நிலையில் தங்கத்திற்கான என்டரி பாயின்ட் உருவாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
ஸ்பாட் சந்தையில் டிரம்ப்-ன் போர் 2-3 வாரத்தில் முடிவுக்கு வருகிறது என்ற நிலைப்பாட்டின் காரணமாக தங்கம் விலை இந்த வாரம் 4 சதவீதம் உயர்ந்தாலும் மீண்டும் சரியும் போக்கு துவங்கியுள்ளது. இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை 111 டாலரை தொட்டு அடுத்த ஷாக் கொடுத்துள்ளது. இதனால் தங்கம், வெள்ளி மீதான முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் இந்த வார ஆரம்பத்தில் சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சமீபத்திய அரசியல் தலைவர்கள் பேச்சுக்கள், எச்சரிக்கைகள், தாக்குதல்கள் போர் நீடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை காட்டுகின்றன. இதனால் சந்தையில் அதிகப்படியான நிலையற்ற தன்மை உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-price-falls-sharply-despite-us-iran-war-why-the-safe-haven-rally-is-missing-what-it-means-f-786971.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
